2/6/09

ஈழத் தமிழர்களின் நம்பிக்கையை இழந்து விட்டது இந்தியா: முன்னாள் இந்திய அமைச்சரவை செயலாளர் பி்.இராமன்

இலங்கை விவகாரத்தில் இந்தியா மேற்கொண்ட இரு விதமான நிலையால், உலகத் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக ஈழத் தமிழர்கள் மத்தியில் இந்தியா மீதான நம்பிக்கை தகர்ந்து போய்விட்டது. மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு, தமிழர் விரோத அரசு என்பது போன்ற எண்ணம் ஆழப் பரவி விட்டது என்று முன்னாள் மத்திய அமைச்சரவை கூடுதல் செயலாளர் பி. இராமன் கூறியுள்ளார்
மத்திய அமைச்சரவையின் கூடுதல் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி. இராமன். இப்போது சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் பார் டாப்பிகல் ஸ்டடீஸ் மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் முடிவு குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். இராமன் கூறுவதாவது...
இந்திரா காந்தியை இன்றும் நன்றியுடனும், உணர்வுடனும் நினைத்து்ப பார்க்கும் தமிழர்கள் அதிகம். குறிப்பாக ஈழத் தமிழர்கள் மத்தியில் இந்திரா காந்தி மீது மிகப் பெரிய மரியாதை உள்ளது. காரணம், நமக்காக அவர் துடித்தார், நமக்காக பரிவு காட்டினார், நம் மீது அன்பும், பாசமும் கொண்டிருந்தார், நாம் ரத்தம் சிந்தியபோது வேதனைப்பட்டார் என்ற ஒரே காரணத்திற்காகத்தான். ஆனால் இன்று ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களும் மத்திய அரசின் மீது குறிப்பாக காங்கிரஸ் மீதும், சோனியா காந்தியின் மீதும் மிகப் பெரும் வருத்தத்தில், கோபத்தில் உள்ளனர். அதற்குக் காரணம்,
விடுதலைப் புலிகளுக்கு உதவியாக இந்தியா நடந்து கொள்ளவில்லை என்பதற்காக அல்ல, பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் மிகக் கொடூரமான இனப்படுகொலைக்கு ஆளானபோதும் இந்தியா அதைக் கண்டும் காணாமல் விட்டு விட்டதே, கைவிட்டு விட்டதே என்ற வேதனையில்தான்.
ஈழத் தமிழர்களின் இந்தக் கோபம் இந்தியாவுக்கு நிச்சயம் நல்லதல்ல என்ற கருத்து பரவிக் கிடக்கிறது. உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் ஈழத் தமிழ் சமுதாயத்தினர் மத்தியில் ஆழ வேரூண்றி விட்ட இந்த எண்ணத்தை துடைக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்தியாவிடம் உள்ளது. இலங்கை விவகாரத்தில், இந்தியா இரட்டை வேடம் போட்டது என்பதில் ஈழத்தில் உள்ள தமிழர்களும் சரி, உலக நாடுகள் பலவற்றில் பரந்து விரிந்திருக்கும் தமிழ் சமுதாயத்தினர் மத்தியிலும் சரி யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதை இந்தியா வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக இவர்கள் வேதனைப்படுகின்றனர். தமிழர்களை அழித்த ராஜபக்சவுக்கு இந்தியா உதவிக் கரம் நீட்டியதற்காக கோபத்துடனும் உள்ளனர்.
இலங்கையில், கொடூரமான இனப்படுகொலை நடந்ததை இந்தியத் தரப்பிலிருந்து கடுமையாக யாரும் கண்டிக்காததவும், அதைத் தடுக்க முயலாததும் உலகத் தமிழ் சமுதாயத்தினரை மிகவும் வேதனைப்படுத்தி விட்டது. தமிழர்களுக்கு எதிராக என்னவெல்லாம் செய்கிறோமோ அதற்கெல்லாம் இந்தியாவின் முழு ஆதரவும் இருக்கிறது என்ற எண்ணத்தை ஆணித்தரமாக அவ்வப்போது கோத்தபாய ராஜபக்சவும், சரத் பொன்சேகாவும் நிரூபிக்க முயன்றபோது அதை தடுக்கவோ, மறுக்கவே இந்தியா முயலவில்லை என்பதும் இந்தியா மீதான உலகத் தமிழர்களின் வருத்தத்திற்கு இன்னொரு காரணம்.
இந்திய அரசும், காங்கிரஸும், இலங்கை இனப்பிரச்சினையில் நடந்து கொண்ட விதத்தால்தான் இன்று ஈழத் தமிழர்கள், சோனியா காந்தி மீது கோபமாக இருக்க முக்கியக் காரணம்.
இந்தக் கோபம்தான் இப்போது விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் ரூபத்தில், கிட்டத்தட்ட விடுதலைப் புலிகளின் கருத்தாக, இணையதளங்களில் வெளியாகும் பல்வேறு கட்டுரைகள், செய்திகள், ஆய்வு செய்திகள் மூலம் உலா வந்து கொண்டுள்ளன. குறிப்பாக சோனியா காந்தியை தமிழர் விரோத சக்தியாக சித்தரித்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அதேபோல, முதல்வர் கருணாநிதியையும் தமிழர் விரோத சக்தியாக மாற்றி வருகின்றனர். சோனியா காந்தியும், கருணாநிதியும் தமிழர்களை இக்கட்டான நிலையிலிருந்து மீட்காமல், அழிய விட்டு விட்டதாக கடும் கோபத்துடன் உள்ளது ஈழத் தமிழ் சமுதாயம். அதேபோல விடுதலைப் புலிகளும் கூட லெபனான் மீது இஸ்ரேல் 2006ம் ஆண்டு கடும் தாக்குதல் நடத்தியபோது உலக சமுதாயம் அழுத்தம் கொடுத்து இஸ்ரேலை அடக்கியது போல, இப்போதும் உலக சமுதாயம் இலங்கையை கட்டுப்படுத்தி விடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அது பொய்த்துப் போய் விட்டது.
பக்கத்தில் இருக்கும் இந்தியாவே அமைதியாக இருந்ததால் உலக சமுதாயமும், ஒப்புக்கு சில கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டு அமைதியாகி விட்டது. அதேசமயம், விடுதலைப் புலிகள் இயக்கம், அப்பாவி மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதாக வெளியான செய்திகளால் பிரபாகரன் மீதும், புலிகள் இயக்கம் மீதும் எதிர்மறையான கருத்துக்கள் பரவக் காரணமாகி விட்டது.
தென் ஆப்பிரிக்காவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸைத் தவிர வேறு எந்த உலக அமைப்பும் விடுதலைப் புலிகளுக்கு பகிரங்க ஆதரவு தர முன்வரவில்லை. இந்தியா, இப்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான நாடாக மட்டுமல்லாமல், தமிழ் விரோத நாடாகவும் உலகத் தமிழர்களால் பார்க்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இது இந்தியாவுக்கு நிச்சயம் நல்லதல்ல.
இந்திரா காந்தி மீது இன்னும் ஈழத் தமிழர்கள் நன்றியுடன் இருப்பதற்கு அவர் செயல்பட்டவிதமும், அவர் தமிழர்கள் பால் காட்டிய அன்பும், பரிவும், பச்சாதாபமும்தான் காரணம் என்பதை இந்திய அரசு மறந்து விட்டதாகவே தெரிகிறது. தமிழர்களின் துயரங்களுக்காகவும், அவர்கள் இழந்த உரிமைகளைப் பெறவும் இந்திரா காந்தி துடித்தார். ஆனால் தற்போது உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அப்படியே இந்திராவுக்கு நேர் மாறாக இருப்பதாக ஈழத் தமிழர்கள் கருதுகிறார்கள். தமிழ் மக்களின் துயரத்தை கொஞ்சம் கூட பகிர்ந்து கொள்ளவோ, பரிவு காட்டவோ சோனியா முன்வரவில்லை என்பது அவர்களின் ஆழமான வருத்தமாக உள்ளது.
இந்த எண்ணத்தைத் துடைத்து, தமிழர்கள் மீது பாசத்துடன்தான் உள்ளோம் என்பதை இந்திய அரசியல் தலைவர்கள் நிரூபிக்க வேண்டும். அதற்கு, இலங்கையை நிர்ப்பந்தப்படுத்தி, தமிழர்களுக்கும் சம உரிமை, சம அந்தஸ்து, கெளரவமான, அமைதியான வாழ்க்கையைப் பெற்றுத் தர இந்தியா முழுமூச்சுடன் ஈடுபட வேண்டும்.
அது மட்டும்தான் இந்தியா மீதான அவப்பெயரை துடைக்க ஒரே வழி.

1 கருத்து: